சமீபத்திய பதிவுகள்

தேடல்

Calender

<<  February 2012  >>
SunMonTueWedThuFriSat
2930311234
567891011
12131415161718
19202122232425
26272829123
45678910

அருந்ததி ராய் உயிர்மைக்கு செய்தது என்ன?

புதிய பத்தி : சொல்லில் எரியும் சுடர் 


உயிர்மை இந்த இதழில் யமுனா ராஜேந்திரன் அருந்ததி ராய் தொடர்பாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் அருந்ததி ராயின் The God of Small Things நாவலைத் தமிழில் வெளியிட உயிர்மை பதிப்பகம் உரிமைபெற்றது தொடர்பாகவும், பின்னர் மொழிபெயர்ப்பு நிறைவடைந்த நிலையில் அருந்ததி ராய் அதிலிருந்து விலகிக் கொண்டது தொடர்பாகவும் ஒரு குறிப்பு வருகிறது. இதுதொடர்பாக எழுத வேண்டிய சந்தர்ப்பங்கள் பல வந்தும் நான் பிடிவாதமாக மௌனம் காத்து வந்தேன். எனது நண்பரான பிரபல ஆங்கில நாளிதழின் ஆசிரியர் ஒருவர் இந்த விவகாரம் பற்றித் தெரிந்து மிகவும் மனம் கொதித்துப் போய் என்னை ஒரு பேட்டியளிக்குமாறு கேட்டார். நான் பிடிவாதமாக மறுத்துவிட்டேன். அதற்கு ஒரே காரணம், அருந்ததி ராய் மீது இன்றளவும் கொண்டிருக்கும் பெரும் மதிப்பே. இந்திய அதிகார வர்க்கம் மற்றும் ஏகபோக முதலாளிகளைப் பொதுக் களனில் எதிர்த்துப் போராடும் தீரம் மிக்க ஒரு அறிவுஜீவி என்ற முறையிலும், அவருடைய பல அரசியல் நம்பிக்கைகள் என்னுடைய நம்பிக்கைகளும்கூட என்பதற்காகவும் அவருக்கு சிறுமை சேர்க்கும் ஒரு பதிவினைச் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அருந்ததி ராய் எந்த அதிகார வர்க்க முதலாளித்துவ குணங்களுக்கெதிராகப் போராடுகிறாரோ அத்தகைய குணாதிசயத்தையே தான் சம்பந்தப்பட்ட ஒரு விவகாரத்தில் கொண்டிருந்தார் என்பதுதான் மிகவும் வினோதமானது.

2003 நவம்பரில் உயிர்மை பதிப்பகம் அருந்ததி ராயின் லண்டன் ஏஜெண்டான David Godwin Associates நிறுவனத்துடன் The God of Small Things நாவலைத் தமிழில் மொழி பெயர்ப்பதற்காக ஒப்பந்தம் ஒன்றைச் செய்தது. அமெரிக்கவாழ் தமிழரும் எனது நெருங்கிய நண்பருமான காஞ்சனா தாமோதரன் இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அன்றைய டாலர் மதிப்பில் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ரூபாய் காப்புரிமைத் தொகையாக முன்கூட்டியே செலுத்தப்பட்டது. மொழிபெயர்ப்பு பணியில் ஜி.குப்புசாமி ஈடுபட்டார். 2 ஆண்டுகள் மிகக் கடுமையான உழைப்பில் மொழிபெயர்ப்பு உருவாக்கப்பட்டது. அருந்ததி ராயின் மிகத் தீவிரமான கவித்துவ நடையை அதே செழுமையுடன் குப்புசாமி தமிழில் கொண்டுவந்தார். கவிஞர் சுகுமாரனும் வேறு சில நண்பர்களும் அந்தப் பிரதியைத் திரும்பத் திரும்ப செப்பனிட்டு மேம்படுத்தினார்கள். இறுதி வடிவம் செய்யப்பட்ட பிரதி ஒப்புதலுக்காக David Godwin  Associates நிறுவனத்துக்கும் அருந்ததி ராய்க்கும் அனுப்பப்பட்டது. David Godwin  Associates நிறுவனம் ஒப்பந்தக் காலத்திலிருந்து ஒரு வாரம் காலதாமதமாகப் பிரதி கிடைத்ததற்காக  ஒப்பந்தத்தை ரத்து செய்தது. அருந்ததி ராய் தனக்கு அனுப்பப்பட்ட பிரதியைப் பிரித்துப் பார்க்காமலே திருப்பி அனுப்பினார். அதற்குப் பிறகு எனக்குத் தெரிந்த அத்தனை வழிகளிலும் அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். தொடர்ந்து மின்னஞ்சல்களும் கடிதங்களும் அனுப்பினேன். புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் பால் சக்காரியா மூலம் அருந்ததி ராயைத் தொடர்பு கொண்டு காரணம் கேட்க முயற்சித்தேன். அருந்ததி ராய் பதிலளிக்க மறுத்துவிட்டதாக சக்காரியா தெரிவித்தார். பின்னர் டெல்லியிலிருக்கும் எனது நண்பரும் புலி நககொன்றை நாவலின் ஆசிரியருமான பி.ஏ.கிருஷ்ணன் மூலம் அருந்ததி ராயைத் தொடர்புகொள்ள முயற்சித்தேன். எதற்கும் அவர் மசியவில்லை. அந்த மொழிபெயர்ப்பு நிராகரிக்கப்பட்டு இருந்தால் எனக்குப் பிரச்சினையேயில்லை. ஆனால் கண்ணுக்கு முன்னால் தெரியாத சூதின் முன்னால் நான் தோல்வியடையத் தயாரில்லை. லண்டனில் வசிக்கும் என்னுடைய சிநேகிதி ஒருவர் மூலமாக David Godwin  Associates நிறுவனத்துடன் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டேன். கடைசியில் அந்த நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் என் சிநேகிதியிடம் இப்படித் தெரிவித்தார்: இந்த விவகாரம்  உண்மையில் மிகவும் வருந்தத்தக்கது. அருந்ததி ராயிடம் உங்கள் பதிப்பகத்தைப் பற்றி யாரோ எதிர்மறையான தகவலைக் கொடுத்திருக் கிறார்கள். அதனடிப்படையிலேயே அருந்ததி ராய் இந்த முடிவிற்கு வந்திருக்கிறார். எங்களால் ஒன்றும் செய்யமுடியாது. நாங்கள் அவருக்காக வேலை செய்யும் ஏஜெண்ட். ஆனால் உங்களுக்கு இழைக்கப்பட்டது அநீதி.இப்போது யமுனா ராஜேந்திரனின் கட்டுரையில் மேற்கோள் காட்டப்படும் அருந்ததி ராயின் கூற்று இந்தத் தகவலை உறுதி செய்கிறது.

கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் அவருடைய படைப்பின்மீது உயிரைக் கொடுத்து வேலை செய்த ஒரு எழுத்தாளனின் உழைப்பு குறித்து அருந்ததி ராய்க்கு எந்த மரியாதையும் இல்லை. ஒரு நிறுவனம் பற்றி யாரோ போகிற போக்கில் சொன்ன ஒரு தகவலைச் சோதித்துப் பார்ப்பதற்குக்கூட அவருக்கு மனமில்லை. தனக்கு செலுத்தப்பட்ட காப்புரிமை தொகை பற்றி அவருக்கு எந்தக் குற்ற உணர்வும் இல்லை. எல்லாவற்றையும்விட அவர் தன்னோடு ஒரு சட்டபூர்வமான ஒப்பந்தத்தில் ஈடுபட்ட ஒருவரோடு எந்தக் காரணமும் இன்றி பேசக்கூட மறுத்துவிட்டார். நான் சோனியா காந்தியோடு ஒரு ஒப்பந்தத்தில் ஈடுபட்டு அதுபோன்ற ஒரு பிரச்சினை வந்திருந்தால் அவரை சந்தித்துப் பேசுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இருந்திருக்காது. ஆனால் ஆங்கிலத்தில் ஒரே ஒரு நாவல் எழுதிய எழுத்தாளருக்கு இத்தகைய அதிகாரம் எங்கிருந்து வருகிறது? இவர்தான் அதிகார வர்க்கம் பற்றி, முதலாளித்துவம் பற்றிப் பேசுகிறார். ஆதிவாசிகளுக்காகப் பேசுகிறார்.

யமுனா ராஜேந்திரன் தன்னுடைய கட்டுரையில் ரவிக்குமார்தான் இதைத் தடுத்து நிறுத்தினார் என்று பொருள்படும்படி எழுதுவதை நான் நம்ப விரும்பவில்லை. ரவிக்குமாரை பற்றி மட்டுமல்ல, வேறு யாரைப் பற்றியும்கூட அத்தகைய ஒரு பிம்பத்தை நான் உருவாக்கிக் கொள்ள விரும்பமாட்டேன். அருந்ததி ராய்க்கு உயிர்மை பதிப்பகம் பற்றித் தெரிந்துகொள்ள ரவிக்குமாரைத் தாண்டி இங்குள்ள கானகங்களில் வசிக்கும் யாரேனும் மாவோயிஸ்ட்டுகளோ அல்லது பழங்குடிகளோ தான் உயிர்மையைப் பற்றிய பிழையான அத்தகைய தகவலை அளித்திருப்பார்கள் என்று நான் நம்ப விரும்புகின்றேன். ரவிக்குமாரிடம் ஆறு மாதங்களுக்குமுன்பு The God of Small Things -ன் தமிழ் மொழி பெயர்ப்பு பிரதியைக் கொடுத்து அனுமதி வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறேன். எத்தனையோ லட்சம் ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கிடைக்க காரணமாக இருந்த அவர் ஒரு சிறிய தமிழ் பதிப்பாளனின் உண்மையான கோரிக்கைக்கு, ஒரு மொழிபெயர்ப்பாளரின் 2 ஆண்டு கடும் உழைப்பிற்கு நியாயம் கிடைக்க உதவுவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. எல்லாவற்றையும்விட ஒரு தலித்தியப் போராளியான ரவிக்குமாரின் நூல்களை நான் பதிப்பிக்கிறேன் என்பதைவிட அருந்ததி ராயின் புத்தகத்தைப் பதிப்பிப்பதற்கு உயிர்மைக்கு வேறென்ன தகுதி வேண்டும்?

இதில் சொல்ல வேண்டிய இன்னொரு பின்குறிப்பும் இருக்கிறது. 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் ஜி.குப்புசாமி காலச்சுவடுடன் தன்னுடைய தேனிலவு ஆரம்பித்திருந்த நாளில் எனக்கு ஒரு ஃபோன் செய்தார். The God of Small Things நாவலின் மொழிபெயர்ப்பை வெளியிட காலச்சுவடு உரிமம் பெற்றிருப்பதாகச் சொல்லி உங்களுக்கு இதில் வருத்தம் ஏதும் இல்லையே என்று கேட்டார். நான் இதை காஞ்சனா தாமோதரனுக்குத் தெரிவித்தேன். அவர் David Godwin  Associates நிறுவனத்துக்கு ஒரு கடிதம் அனுப்பினார். தமிழில் நீங்கள் இந்த நாவலைக் கொண்டு வரும் பட்சத்தில் உயிர்மைக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அதில் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்பிறகு அந்த முயற்சி என்னவானதென்று தெரிய வில்லை.

தமிழில் எத்தனையோ இலக்கியப் பிரதிகள் எத்தகைய முன் அனுமதியுமின்றி மொழிபெயர்க்கப்படுகின்றன. மொழி பெயர்ப்பாளரின் பெயர்கூட இல்லாமல் மறு பதிப்பு செய்யப்படுகின்றன. ஆனால் மொழிபெயர்ப்பு சார்ந்து முறையாக அனுமதி பெற்று செயல்பட்ட பதிப்பகத்திற்கு இழிவான இலக்கிய அரசியலால் இத்தகைய கீழறுப்பு வேலை செய்யப்பட்டது. இதற்கு யார் காரணமாக இருந்தார்கள் என்பது எனக்கு முக்கியமல்ல. அவர்கள் கண்ணாடியில் தங்கள் முகத்தைப் பார்த்துக் கொள்ளும் ஒவ்வொரு தருணத்திலும் அவர்கள் பிம்பம் அவர்களைப் பார்த்துக் காறித் துப்பும்.

இந்த விவகாரங்கள் நடந்து கொண்டு இருந்த காலகட்டத்தில் ஒருநாள் சுஜாதாவிடம் இதைப்பற்றிப் பேசினேன். அவருக்கு நான் இந்த நாவலுக்காக ஏன் இவ்வளவு பிரயாசை எடுத்துக்கொண்டேன் என்பது புரியவேயில்லை. என்றாவது நீ ஒரு பொது அரங்கில் அவரைச் சந்திப்பாய். அப்போது அவர் எத்தகைய நல்ல அதிர்ஷ்டத்தை இழந்தார் என்பதை அவருக்குச் சொல்என்றார்.

எதற்காக இவ்வளவும் 

 

நன்றி” உயிர்மை பிப்ரவரி 2010

உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com